×

அமைச்சரை பாலியல் விவகாரத்தில் சிக்க வைக்க சதி; 7வது மாடியில் இருந்து விழுந்து மாடல் அழகி தற்கொலை முயற்சி: ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு

ஜோத்பூர்: ராஜஸ்தான் அமைச்சரை பாலியல் விவகாரத்தில் சிக்க வைக்கும் சதி திட்டத்திற்கு உடன்படாத மாடல் அழகி ஓட்டலின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடல் அழகி ஒருவர், அங்குள்ள ஓட்டலின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து, ஜோத்பூர் போலீஸ் டிசிபி புவன் பூஷன் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வருவாய்த்துறை அமைச்சர் ராம்லால் ஜாட்டை, பாலியல் விவகாரங்களில் சிக்க வைப்பதற்காக சிலர் முயற்சித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தீபிகா மற்றும் அக்‌ஷத் ஆகியோர் அமைச்சர் ராம்லால் ஜாட்டை  பில்வாராவில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் சமீபத்தில் சந்தித்தனர். அவர்களுடன் மேலும் இரு இளம்பெண்கள் இருந்துள்ளனர். இவர்கள் ​அமைச்சரிடமும் சில ஆவணங்களை காட்டியுள்ளனர்.

அந்த ஆவணத்தில் உள்ள பிரச்னையை தீர்த்து வைக்கும்படி கோரியுள்ளனர். ஆனால் அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். அதையடுத்து தீபிகாவும், அக்‌ஷத்தும் சேர்ந்து மாடல் அழகியுடன் அமைச்சர் இருப்பது போன்ற வீடியோவை உருவாக்கி, அவரை மிரட்டி பணிய வைக்க திட்டமிட்டனர். இதற்காக உதயப்பூரை சேர்ந்த மாடல் அழகி குங்குன் உபாத்யாய் என்பவரை தேர்வு செய்தனர். ‘போட்டோ ஷூட்’ எடுப்பதாக கூறி அந்த மாடல் அழகியின் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அவர் குளிப்பதையும் ரகசியமாக வீடியோ எடுத்ததாக மாடல் அழகியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மாடல் அழகியை ஜோத்பூரில் உள்ள ஓட்டலில் தங்கவைத்து, அமைச்சரை போன்ற உருவம் கொண்ட ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்படி வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு மாடல் அழகி உடன்படவில்லை. ஒருகட்டத்தில்  தீபிகா, அக்‌ஷத் ஆகியோரின் தொந்தரவு தாங்க முடியாமல், ஓட்டலின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஷ்டவசமாக அவர், ஓட்டலின் கீழிருந்த கார் மீது விழுந்தார். அதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், தீபிகா, அக்‌ஷத் ஆகியோரை கைது செய்துள்ளோம். இவர்கள் ஏற்கனவே பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களை பாலியல் புகாரில் சிக்கவைத்து பணம் பறித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். அமைச்சரை பாலியல் புகாரில் சிக்கவைக்க மாடல் அழகியை பயன்படுத்திய விவகாரம், ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Rajasthan , Conspiracy to implicate minister in sexual harassment; Model commits suicide by falling from 7th floor: Rajasthan
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை