காரைக்குடி: அதிமுக கூட்டணி முறிந்ததால், காரைக்குடி நகராட்சி தேர்தலில் போட்டியிட பாஜவினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.காரைக்குடி நகராட்சி தேர்தல் பணிகளில் திமுக, காங்கிரஸ்,அதிமுக ஆகிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். பாஜ சார்பில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. அதிமுக-பாஜ கூட்டணி உடைந்ததால் அதிமுக சார்பில், காரைக்குடியில் உள்ள 36 வார்டுகளுக்கும் அக்கட்சி தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியும் அனைத்து வார்டுகளிலும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தது.
அதிமுக தயவில் வார்டு உறுப்பினர் பதவிக்கு கணிசமான ஓட்டுக்களை பெற்று விடலாம் என்று எண்ணிய பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.காரைக்குடியில் உள்ள 36 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட பலர் தயங்குகின்றனர். திமுக-காங்கிரஸ் கூட்டணி காரைக்குடியிலுள்ள 36 வார்டுகளிலும் பலமாக உள்ளது. அதிமுக தனித்து களம் காணுவதால் அமமுக மற்றும் பாஜ ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லாததால், திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.