×

எளிதாய் கிடைக்கும் வயாகரா தர்பூசணி

நன்றி குங்குமம் தோழி

உணவே மருந்து

சர்வ சாதாரணமாக சாலையோரங்களில் கிடைக்கும் தர்பூசணியின் ஸ்பெஷல் எஃபக்டைக் கேட்டால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீங்க. அதுவும் இந்த கோடை வெயிலுக்கு தர்பூசணியை சாப்பிடுவது அலாதி ருசி. வெயில் சூடு தணிக்க மட்டுமல்லாது இதன் மருத்துவ குணங்களை கேட்டால் இதை விடவே மாட்டோம். 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்டுள்ள தர்பூசணியில் லைகோபின் (Lycopene), சிட்ரூலைன் (Citrulline) அதிகம் உள்ளது. தர்பூசணியை உண்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம் படுத்தவும் மற்றும் தசை இறுக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. வைட்டமின்கள் A, B6, C மற்றும் லைக்கோபின், அமினோ ஆசிட்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்தது தர்பூசணி. மேலும் பொட்டாசியம், தாதுப்பொருளும் மிகுந்திருக்கிறது. குறைந்த கலோரி மற்றும் சோடியம் இருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதில் லைகோபின் (Lycopene) என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. செல்களுக்கு தீமை உண்டாக்கக்கூடிய ஃப்ரீ ராடிகல்களுக்கு எதிராக இந்த ஆன்டிஆக்ஸிடென்டுகள் செயல்படக்கூடியவை. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக  அளவில் உள்ளதால், இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். தர்பூசணியில் இருக்கும் லைகோபின் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடின் (Lutein), சியாக்ஸன்தின் (Zeaxanthin) போன்ற ஆன்டிஆக்ஸிடன்டுகள் மாலைக்கண் நோய், கண் மிகை அழுத்த நோய் (Glaucoma) போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.

கோடை காலங்களில் உண்டாகக்கூடிய அதிவியர்வையால் ஏற்படும் நீரிழப்பை (Dehydration) தர்பூசணியில் உள்ள 90 சதவீத நீர்சத்து சரி செய்கிறது.
தர்பூசணியில் உள்ள எல்-சிட்ரூலைன் (2 கப் தர்பூசணியில் 286- 1266 மி.கி) என்ற அமினோ அமிலம் ரத்தக்குழாய் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை பராமரிக்கவும் உதவும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தர்பூசணியில் உள்ள லைகோ பின்(Lycopene) இதய ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் தடுப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகும்.

நன்கு பழுத்த நல்ல சிவப்பு நிறமுள்ள தர்பூசணியை எடுத்துக் கொள்வதன் மூலம் முழுமையான லைகோபின் அளவு கிடைக்கும். நன்கு பழுத்த தர்பூசணியில்தான் பீட்டா கரோட்டின் மற்றும் பினோலிக் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மிகுந்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோல், கண் ஆரோக்கியத்திற்கும் புற்றுநோயைத் தடுக்கவும் பீட்டா கரோட்டின் மற்றும் பினோலிக் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உதவுகின்றன. இதில் மிகுந்திருக்கும் வைட்டமின் B6 நமது மூளையில் பல வேதிப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த வேதிப் பொருட்கள்தான் நமது மனநிலைக்கு காரணமாகின்றன. B6 குறைபாடு மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றிற்கு காரணமாகிறது. தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

திரவக் கழிவுகளை வெளியேற்ற தர்பூசணி பழச்சாறு உதவுவதால், கல்லீரலில் இருந்து அமோனியாவை வெளியேற்ற உதவும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. தர்பூசணியில் உள்ள ஃபிளேவனாய்டு (Flavonoid), கரோட்டினாய்டு (Carotenoid) என்னும் நிறமிகள் கட்டி, வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றன. தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டுள்ளோம். தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாகரா' என்பது தெரியுமா? அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் என்னும் ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் உடம்பை ஆரோக்கி யமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாகரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணி விதைகளும் நல்லதே…

தர்பூசணி பழத்தின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் பெரும்பாலும் தூக்கிப்போடும் தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. தர்பூசணி பழத்தின் விதையை வறுத்து சாலட், கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவற்றில் தூவி சாப்பிடலாம். மிகவும் ருசியானது. இனிமேல் தர்பூசணி பழங்களை சாப்பிடும் முன்பு விதைகளை தனியே அதிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டு அதை உபயோகிக்க வேண்டும்.

சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கிறது

தர்பூசணியின் விதை, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். மிகவும் அதிகமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. நார்ச்சத்து சர்க்கரை வியாதியை குறைப்பதற்கும் உடல் எடையை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகின்றது. மேலும் சர்க்கரை வியாதி டைப் 2 உள்ளவர்களுக்கு இது மிகப் பெரும் உறுதுணையாக திகழ்கிறது.இந்த பழத்தின் விதையில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்துள்ளன. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வீக்கங்கள் (Inflammation) போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் உதவி செய்கிறது.

சோர்வை விரட்டுகிறது

உடல்  சோர்வு  போன்ற  பிரச்சனைகளுக்கு தர்பூசணி பழத்தின் விதை நல்ல ஆறுதலாக இருக்கிறது. தர்பூசணியில் அதிகமான இரும்புச் சத்துக்கள் இருக்கிறது. இதிலிருக்கும் ஹீமோ குளோபின் இதயத்திற்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. இரும்புச்சத்து உடலில் உள்ள சோர்வை நீக்க பெரிதளவு உதவி செய்கிறது. தர்பூசணி பழத்தின் விதையில் இரும்புச்சத்துக்கள் அதிகமாக இருப்பதினால், கலோரிகளில் உள்ள சக்தி கிடைத்து உடலில் உள்ள சோர்வை எளிதாக போக்குகிறது.

இதயத்திற்கு நல்லது

தர்பூசணி பழத்தின் விதையில் மோனோ அன்சாச்சுரேட்டட் (Monou unsaturated fatty acids) மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் (Poly Unsaturated) நிறைந்துள்ளன. இது மாரடைப்பு வருவதற்கான காரணங்களை குறைக்கின்றது. அதாவது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

தர்பூசணி விதைகளில் அதிக அளவு புரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் பலவகையான அமினோ ஆசிட்டுகள் நிறைந்து இருக்கின்றன. இவை அதிக உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. தினமும் நமது உணவில் சிறிது தர்பூசணி பழத்தின் விதையை கலந்து சாப்பிட வேண்டுமென்று ஒரு சில ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. மேலும் இதில் மெக்னீசியமும் இருக்கின்றது. இதுவும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பெரிதளவு உதவி செய்கின்றது. மெக்னீசியம் உடலில் குறைந்தால் பொட்டாசியத்தின் அளவும் குறைந்து விடும். இதனால் அதிகபட்ச ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த தர்பூசணி பழத்தின் விதையில் மெக்னீசியம், பொட்டாசியம் என இரண்டுமே இருக்கிறது என்பதால் உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்கள் தாராளமாக சேர்க்கலாம்.

தசைகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்

தர்பூசணி பழத்தின் விதையானது நம் உடலின் தசைகளை ஆரோக்கியமும் சக்தி வாய்ந்ததாகவும் பாதுகாத்திட உதவுகிறது. தர்பூசணி பழத்தின் விதையில் மிகவும் முக்கியமான நியூட்ரிஷன் வகைகள் இருக்கிறது. அது நம் தசையில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து உடனடியான முன்னேற்றத்தை தசைகளுக்கு கொடுக்கிறது. உடற்பயிற்சி நிலையத்தில் சென்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் , தசைபிடிப்பு போன்றவற்றுக்கு தர்பூசணி பழத்தின் விதை பெரிதளவில் உதவி செய்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் தசை வளர்ச்சிக்கு நல்ல உறுதுணையாக இருக்கிறது. இதில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்களுக்கு மெட்டபாலிசம் மிக அதிகமாகவே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழுப்பை குறைக்க

தர்பூசணி பழத்தின் விதையில் சிட்ரூலைன் (Citrulline) எனப்படும் வேதிப்பொருள் இருக்கின்றது. இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது. இதில் உள்ள அமினோ ஆசிட் உடலில் தேவையில்லாத இடங்களில் தேங்கி இருக்கும் கொழுப்பு சத்தை கரைக்க உதவுகிறது. இந்த விதைகளில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. எனவே நீங்கள் உங்கள் நொறுக்கு தீனிக்கு பதில் இந்த விதைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஒரு பாத்திரம் நிறைய விதைகளை சாப்பிட்டாலே அதில் வெறும் 150 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உங்கள் உடல் எடை குறைப்பு முயற்சியில் எந்தவித பிரச்சனைகளும் இருக்காது. 158 கலோரி என்பது கிட்டத்தட்ட 400 விதைகளின் கலோரிகள் ஆகும்.

மூளை செயல்பாட்டை அதிகரிக்க

தர்பூசணி பழத்தின் விதைகளில் ஃபோலேட் (Folate) எனப்படும் அமிலம் நிறைந்து இருக்கிறது. இது போலிக் ஆசிட் அல்லது வைட்டமின் B9 என்று சொல்லப்படும். இவ்வகையான வைட்டமின் மூளை செயல்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.மேலும் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக உடலில் அதிகளவு வைட்டமின் B9 சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தர்பூசணி விதையில் அவை அதிகமாகவே இருக்கின்றது.மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ஆனது சிந்திக்கும் திறன், நினைவுத்திறன் போன்றவற்றிற்கு பெரிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் உள்ள  அதிக  அளவு ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மூளையை பாதுகாக்கிறது.                    

தர்பூசணியின் விதை, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது என்று கண்டு பிடித்துள்ளனர். உடல் எடையை குறைப்பதற்கும் இது பெரிதும் உதவுகின்றது. வீக்கங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் உதவி செய்கிறது.

சமையல்கலை நிபுணர் நித்யா நடராஜன் தர்பூசணி பழத்தை வைத்து ஐஸ் லாலி மற்றும் தர்பூசணி இறால் சாலட் இரண்டையும் செய்யும் முறையை இங்கே விவரிக்கிறார்…

தர்பூசணி ஐஸ் லாலி

தேவையான பொருட்கள்

தர்பூசணி - 4 கப் (துண்டங்கள்)
கிவி பழம் - 2
சர்க்கரை - 1 டீஸ்பூன் (தேவையெனில்).

செய்முறை

தர்பூசணியின் விதையை எடுத்துவிட்டு, அதை  தண்ணீர் இல்லாமல்  மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். தேவையெனில் அதில் சர்க்கரையைச் சேர்த்து கலந்து, ஐஸ் லாலி செய்யும் பாத்திரத்தில் முக்கால் பாகம் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் 10 மணி நேரம் வைக்கவும். பின் அதை வெளியில் எடுத்து அதில் மீதி உள்ள இடத்தில் கிவி பழத்தை அரைத்து அதில் சேர்த்து மீண்டும் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் (Freezer) வைத்து பின்பு எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாத பெரியவர்களுக்கு நல்ல காரமாக தர்பூசணியை வைத்து காரமாக சாலட்டும் செய்து தரலாம்.

தர்பூசணி இறால் சாலட்

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2 பல் (நசுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
வினிகர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
அவகேடா -1 (பொடியாக நறுக்கியது)
இறால் வேகவைத்தது - 100 கிராம்
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
மல்லித் தழை - 1 கைப்பிடி
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தர்பூசணி - 3 கப் (விதை நீக்கியது).

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பூண்டு, மிளகாய், வினிகர், சர்க்கரை எலுமிச்சைச் சாறு, இறால் ஆகியவற்றை கலந்து 10 நிமிடம் வைக்கவும். பின்னர் அதில் தர்பூசணி துண்டுகள், அவகேடா போட்டு கலந்து மல்லித்தழை மற்றும் தர்பூசணி விதைகளை வறுத்து பொடியாக்கி வைத்துள்ளதை மேலே தூவி பரிமாறலாம். நல்ல சத்தானது. பெரியவர்களுக்கு ஏற்றது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தொகுப்பு: மகாலட்சுமி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்