திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார், நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், தங்கை கணவர் சுராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேரும் பயன்படுத்திய 6 போன்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ஒப்படைக்கப்பட் போன்களை ேபாலீசார் பரிசோதித்தனர். அதில் தாங்கள் கூறியதில் 5 போன்கள் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு போனுக்கு பதிலாக வேறு போன் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த போனில் இருந்து 2000க்கு மேற்பட்ட அழைப்புகள் சென்றுள்ளன என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எல்லா போன்களையும் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, போலீசாருக்கு தேவைப்பட்டால் அங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து 5 பேரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு (நாளை) ஒத்தி வைத்தார்.இதற்கிடையே திலீப் ஐபோனை சர்வீஸ் செய்த நபர், சாலை விபத்தில் மரணம் அடைந்ததில் மர்மம் உள்ளது என்று அவரது அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் சலீஷ் (42). ஆலுவாவில் உள்ள ஐபோன் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்தார். அவரிடம் தான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திலீப் தனது ஐபோனை சர்வீசுக்கு கொடுத்துள்ளார். அடிக்கடி திலீப் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அங்கமாலி அருகே சென்றபோது ரயில்வே மேம்பால தடுப்பில் கார் மோதியதில் சலீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாதாரண விபத்தாகவே கருதினர். ஆனால் விபத்தை பார்த்தவர்கள், சலீஷின் காருக்கு மிக அருகே வேறொரு கார் அதிவேகத்தில் சென்றதாக கூறினர். இதற்கிடையே சலீஷின் அண்ணன் சிவதாஸ் அங்கமாலி போலீசில் புகார் அளித்துள்ளார். இது திட்டமிட்ட கொலையா? அல்லது சாலை விபத்தா? என்பது போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.