புதுடெல்லி: உத்தரபிரதேச தேர்தலில் எலியும் பூனையுமாக பாஜகவும், சமாஜ்வாதியும் பிரசாரம் செய்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் முலாயமின் பாதத்தை தொட்டு ஸ்மிருதி இரானி ஆசி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் நேற்று தொடங்கியது. அப்போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், முதல்வருமான முலாயம் சிங் யாதவ், அவரது உதவியாளரின் உதவியுடன் படிகளில் மெதுவாக இறங்கி வந்தார்.
அவருக்கு எதிரே ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்று கொண்டிருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து முலாயம் சிங் யாதவின் பாதங்களை தொட்டு ஸ்மிருதி இரானி ஆசிப் பெற்றார். அப்போது முலாயம் சிங்கும், ஸ்மிருதி இரானியின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்மிருதி இரானியுடன் மற்றொரு அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் அங்கு நின்றிருந்தார். முலாயம் சிங் யாதவ் படிக்கட்டுகளில் இருந்து இறங்குவதற்கு, முக்தார் அப்பாஸ் நக்வி உதவி செய்தார்.
உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவும், சமாஜ்வாதியும் கடுமையாக மோதி வரும் நிலையில், முலாயம் சிங்கின் பாதத்தை தொட்டு ஸ்மிருதி இரானி ஆசிபெற்றது, பல்வேறு அரசியல் அர்த்தங்களை ஏற்படுத்தி உள்ளதாக விமர்சகர்கள் கூறிவருகின்றனர். மேலும், யாதவ் சமூக ஓட்டுகளை கவருவதற்காக பாஜக தலைவர்கள் உள்நோக்க அரசியல் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.