புதுடெல்லி: இந்திய சிறைகளில் 413 தூக்கு தண்டனை கைதிகள் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒன்றி உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம், ‘இந்திய சிறை புள்ளிவிவரங்கள் - 2020’ குறித்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளில் 413 பேர் தூக்கு தண்டனை கைதிகள் ஆவர். அவர்களில் 94 பேர், 2020ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
இவர்களில் உத்தரபிரதேசம், ராஜஸ்தானை சேர்ந்த தலா 15 பேர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 14, பீகாரை சேர்ந்த 8, தமிழ்நாடு மற்றும் ஜார்கண்டை சேர்ந்த தலா 6 பேர் அடங்குவர். 29 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 7 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தையும், தலா 5 பேர் தமிழ்நாடு, ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள். மொத்தமுள்ள 413 தூக்கு தண்டனை கைதிகளில் அதிகபட்சமாக 53 பேர் உத்தரபிரதேச சிறைகளில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா சிறைகளில் 49 பேரும், மத்திய பிரதேச சிறைகளில் 40 பேரும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.