சேலம்: சேலம் பெரமனூரை சேர்ந்த 31 வயது இளம்பெண், செவ்வாய்பேட்டையில் உள்ள ஸ்வீட் கடையில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரது தாய் கேட்டபோது, வேலை செய்யும் இடத்தில் தன்னிடம் 3 பேர் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், அடிக்கடி இடித்து விட்டு செல்வதாகவும் கூறி அழுதார். இதுகுறித்து நேற்று செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கேஷியராக வேலை பார்க்கும் புதுக்கோட்டை ஆதனகோட்டையை சேர்ந்த கணேசன், தஞ்சாவூர் கொரட்டூரைச் சேர்ந்த சப்ளையர் வன்மிகநாதன்(43), உ.பி. பத்தேப்பூர் ராகேஷ்சிங்(21) ஆகியோர் மீது பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.