மன்னார்குடி: தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் 8 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-அமமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் மட்டும் தேமுதிக-அமமுக கூட்டணி உருவாகி உள்ளது. நேற்று மன்னார்குடியில் உள்ள அமமுக அலுவலகத்தில் அமமுக நகர செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், தேமுதிக சார்பில் நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மன்னார்குடி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் தேமுதிகவினர் 10 வார்டுகளை ஒதுக்குமாறு கேட்டனர். முடிவில் 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டது. இதில் 26வது வார்டு மட்டும் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 3 வார்டுகள் இன்று முடிவாகிறது.