திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், தமிழ் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் அகத்தியன் தலைமையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் சனநாயக பேரவை, தலித் விடுதலை கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் வீரலூர் கிராமத்தில் பொதுப்பாதையில் அருந்ததியர் சடலத்தை எடுத்து செல்ல, எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்தும், அருந்ததியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டிப்பதுடன் அவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்: காங்கயம் ரோடு நல்லூர் புதுப்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையால் அந்த வழியாக செல்கிற பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.