சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எஸ்.சிங்கார வடிவேல் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், மிகச் சிறந்த வழக்கறிஞராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தஞ்சை தொகுதியிலிருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எஸ்.சிங்கார வடிவேல் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மிகுந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழக காங்கிரஸ் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.