புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த காலங்களில் பேசும்போது மித்ரன் அதாவது ‘நண்பர்கள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் பிரதமரை மறைமுகமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சரான சசிதரூர் தனது டிவிட்டர் பதிவில், ‘ஒமிக்ரானை விட ஒ மித்ரன் மிகவும் அபாயகரமானது. ஒமித்ரனின் பயங்கரமான விளைவுகளை நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். நாட்டை பிளவுபடுத்துதல், மதம் மற்றும் வெறுப்புணர்ச்சியை தூண்டுதல், அரசியலமைப்பு மீதான நயவஞ்சக தாக்குதல் மற்றும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துதல் உள்ளிட்டவற்றை பார்க்கிறோம். இந்த வைரஸ் வீரியம் குறைந்தது கிடையாது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாஜ செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தனது பதிவில், ‘முதலில் காங்கிரஸ் கட்சி கொரோனா தடுப்பூசி குறித்த தயக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. தற்போது ஒமிக்ரான் ஆபத்தானது கிடையாது என்று கூறுகின்றது. ஆரம்பத்தில் கொரோனாவை அகிலேஷ் யாதவ் சிஏஏ( குடியுரிமை திருத்த சட்டம்) என்று குறிப்பிட்டார். இவர்களுக்கு பொறுப்புணர்வு இல்லையா?’ என குறிப்பிட்டுள்ளார்.