சென்னை: சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது. இது குறித்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். உண்மை கண்டறியும் குழுவின் விசாரணை நிலை என்ன என்று நீதிபதிகள் அரசுத்தரப்பிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்திவந்ததால் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்றார். அதற்கு மனுதாரர், கோயிலிலிருந்து சிலை காணாமல் போனால் அந்த சிலையைக் கண்டுபிடித்து அதே இடத்தில் வைக்க வேண்டும். இல்லையென்றால் அது போன்றதொரு சிலையை தான் வைக்க வைக்க வேண்டுமென்று ஆகம விதி உள்ளது என்றார். இதையடுத்து, காணாமல் போன மயில் சிலையை போல ஒரு சிலையை அங்கு வைப்பது தொடர்பாக தொல்லியல் துறையுடன் ஆலோசித்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தங்களது விசாரணையை ஆறு வாரங்களுக்கு முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையையும் ஆறு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.