சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை அதிமுக கைப்பற்றும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்க உள்ளதாக அறிவித்துவிட்டன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ மட்டுமே பெரிய கட்சியாக இருந்தது. இந்த நிலையில் பாஜக தனித்துப்போட்டியிட உள்ளதாக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டுமே அதிமுக - பாஜக தனித்தனியே போட்டி; வருங்காலத்தில் கூட்டணி தொடரும்.
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே பாஜகவுடன் கூட்டணி. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட அளவு தான் இடங்கள் ஒதுக்க முடியும். நகர்புற தேர்தலில் அதிமுகவினர் அதிக இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது எங்களின் கடமை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறு பேசிய நைனார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துவிட்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வருத்தம் தெரிவித்துவிட்டார். தவறு செய்யாதவர்கள் இல்லை எனவும் கூறினார்.