×

தாளவாடி மலைப்பகுதியில் டிராக்டரில் ஏற்றி வந்த சோளத்தட்டு மீது மின்கம்பி உரசி தீ விபத்து

சத்தியமங்கலம் :  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் மானாவாரியாக பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள தட்டுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவது வழக்கம். விளைநிலத்தில் காயவைக்கப்பட்ட மக்காச் சோளத் தட்டைகளை விவசாயிகள் டிராக்டரில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் தாளவாடி அருகே உள்ள அருள்வாடி பகுதியிலிருந்து மக்காச்சோள தட்டுகள் பாரம் ஏற்றப்பட்டிருந்த ஒரு டிராக்டர் அரக்கல்வாடி சாலையில் சென்று கொண்டு இருந்தது. சிறிது துரம் சென்றபோது சாலையின் ஓரத்தில் தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியதில் மக்காச்சோள தட்டுகள் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதை கண்ட ஓட்டுநர், டிராக்டரின்  டிரைலர் பகுதியை சாமர்த்தியமாக கழற்றி டிராக்டரை மட்டும் நகர்த்தியதால் டிரைலரில் உள்ள மக்காச் சோளத் தட்டைகள் மட்டும் தீ கொழுந்துவிட்டு எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.


Tags : Talawadi hills , Satyamangalam: Irrigated maize in the Talawadi hills near Satyamangalam in Erode district.
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் லாரிகளை...