×

கிறிஸ்தவ பெண்களிடம் தகராறு; ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சமாதானபுரதில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்து சபையில் ஊழியம் செய்து வருபவர்கள் ராணி, தேவசாந்தி. இவர்கள் இருவரும் இலுப்பூர் அருகே திம்மயம்பட்டியில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஜெபம் செய்வதற்காக கடந்த 21ம் தேதி சென்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் திம்மயம்பட்டியை சேர்ந்த கணேஷ்பாபு (38) மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் அந்த கிறிஸ்தவ பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்துக்களை மாதம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். மேலும், அவர்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டும், அவர்கள் உபயோகித்த செல்போனை அபகரித்து கொண்டும் விரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் இலுப்பூர் கிறிஸ்தவ சபையில் இதுபற்றி விளக்கியுள்ளனர். உடன் மேல் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் கடந்த 24ம் தேதி புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கணேஷ் பாபுவை போலீசார் கைது செய்து இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கீரனூர் சிறையில் அடைத்தனர். அவரை கைது செய்ததை கண்டித்து ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து அமைப்பினர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்து மாலையில் விடுவித்தனர்.

Tags : RSS ,Christian , Conflict with Christian women; RSS official arrested
× RELATED கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!!