விருதுநகர்: விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் இரவு கழிவுகளை எரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்(58) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த போர்மேன் சிவகாசி தேவேந்திரன்(33), அம்மன்கோவில்பட்டி குபேந்திரன்(29) ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குபேந்திரன் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. மேலும் 80 சதவீத தீக்காயங்களுடன் தேவேந்திரன் தீவிர சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக ஆமத்தூர் போலீசார், ஆலை உரிமையாளர் செல்வக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து நேற்று அவரை கைது செய்தனர். விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டதாக ஆலையின் உரிமத்தை கலெக்டர் மேகநாதரெட்டி, தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்தில் மட்டும் 4 பட்டாசு ஆலை விபத்துகளில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
₹3 லட்சம் நிதி உதவி: வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரனுக்கு ₹1 லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.