ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய நடந்த துப்பாக்கி சூட்டில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, பத்காம் மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, வீரர்கள் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளை சரணடையும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதனை ஏற்க மறுத்து திடீரென தாக்குதலை தொடங்கினர்.
இதனால், வீரர்கள் கொடுத்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 4 பேரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேபோல், பத்காம் மாவட்டத்தில் சரார் ஐ ஷெரிப் பகுதியில் வீரர்கள் நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். சம்பவம் நடந்த 2 இடங்களில் இருந்தும் ஏராளமான ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.