சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ், எடப்பாடியை சந்தித்து நவநீதகிருஷ்ணன் எம்.பி விளக்கம் அளித்தார். அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பொறுப்பு நவநீதகிருஷ்ணன் எம்.பி. வகித்து வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தநிலையில், கடந்த 28ம் தேதி நவநீதகிருஷ்ணனை வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். இதனால், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பினை பிடிக்க அதிமுகவின் சில முக்கிய தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில், ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரை நவநீதகிருஷ்ணன் எம்.பி சந்தித்து விளக்கம் அளித்தார். நவநீதகிருஷ்ணன் எம்.பி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது காரில் வராமல் ஆட்டோவில் வந்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.