கூலிட்ஜ்: 16 அணிகள் பங்கேற்ற 14வது யு 19 (19 வயதுக்குட்பட்டோர்) ஐசிசி உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் 4 முறை சாம்பியனான இந்திய அணி நடப்பு சாம்பியன் வங்கதேசத்துடன் மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 37.1 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மெஹ்ரோப் 30 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் ரவிக்குமார் 3, விக்கி ஆஸ்ட்வால் 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அங்க்ரிஸ் ரகுவன்ஷி 44, ஷேக் ரஷீத் 26 ரன் அடித்தனர். கேப்டன் யாஷ் துல் நாட்அவுட்டாக 20 ரன் எடுத்தார். ரவிக்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார். வரும் 2ம்தேதி 2வது அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. வரும் 1ம் தேதி முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிபோட்டி வரும் 5ம்தேதி நடைபெறுகிறது.