சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே, அறிவித்துள்ளது. இதையடுத்து தேமுதிக சார்பில் வார்டு கவுன்சிலர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட விரும்பும் கட்சியினரை நேரில் அழைத்து கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் 3வது நாளாக நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்கே சுதீஷ்,பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் மூன்றாவது நாளாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் தென் சென்னை வடக்கு மாவட்ட பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேமுதிக சார்பில் சென்னை மாநகரில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டன. அப்போது, தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு செய்ய முடியுமா, போட்டியிட்டால் வார்டுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கட்சியினரிடம் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.