டெல்லி : இந்தியாவின் ஜனநாயக அமைப்பினை உளவு பார்க்க பெகாசஸ் மென் பொருளை வாங்கியதன் மூலம் மோடி அரசு தேச துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 2017ம் ஆண்டே இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்தியா பெகாசஸ் மென் பொருளை வாங்கி இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றம் செய்துள்ளார். நமது முதன்மை ஜனநாயக நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக பிரதமர் மோடி அரசு பெகாசஸ் மென் பொருளை வாங்கி இருப்பதாக அதில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஆயுதப்படையினர், நீதித் துறையினர் என அனைத்து தரப்பினரின் தொலைபேசிகளும் ஓட்டுக் கேட்கப்பட்டுள்ளது உறுதியாகி இருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, இதன் மூலம் பிரதமர் மோடி அரசு சொந்த நாட்டிற்கே தேச துரோகம் செய்து இருப்பதாக விமர்சித்துள்ளார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காகவே பெகாசஸ் உளவு மென் பொருளை மோடி அரசு வாங்கியதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.