×

ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கைவரிசை காட்டிய லலிதா ஜுவல்லரி கொள்ளையன்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட முருகனின் கூட்டாளிகளில் ஒருவர் மீண்டும் கைவரிசை காட்டி சிக்கியிருக்கிறார். ஜாமீனில் வெளிவந்து மதுரை அருகே பூட்டிய வீட்டில் 42 சவரன் நகையை திருடிய கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் 55 வயதான கோபாலகிருஷ்ணன். இவரது வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கொள்ளை நடைபெற்றது. வீட்டின் கதவை உடைத்து 47 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார். இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரில் வாடிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மறைந்த பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளியும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவருமான கணேசன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஜாமீனில் வெளிவந்து சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் வசித்துவந்த கணேசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபாலகிருஷ்ணன் வீட்டில் கைவரிசை காட்டியது கணேசன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கணேசனை மீண்டும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர். பணம் மற்றும் மீதி நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Lalita , Robbery
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்