கூடலூர் : உயரமான இரும்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக பொருத்தப்பட்டுள்ள இந்த 9 கேமராக்கள் மூலம் 360 டிகிரி கோணத்தில் வனப்பகுதிகளை கண்காணிக்க முடியும். அனைத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் பதிவுகளை நேரடியாக தெப்பக்காட்டில் உள்ள பேஸ்- 4 கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கும் வகையிலும், கண்காணிப்பு மையத்தில் இருந்தவாறு கேமராவை பல்வேறு கோணங்களில் திருப்பி வனப் பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் அன்னிய நபர்கள் நடமாட்டம், வனவிலங்குகளின் நடமாட்டம், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிக்கும் வகையில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளின் எல்லைப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயையும் கண்காணித்து உடனடியாக காட்டுத்தீ பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து வனக் குற்றங்களில் ஈடுபடுவோரையும் கண்கானிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.