திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூரில் ஜின்னா டவர் அமைந்துள்ளது. இந்திய பிரிவினைக்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பெயரில் அமைந்திருக்கும் இந்த டவருக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பாஜ மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினமான நேற்று முன்தினம் காலை, இந்து வாகினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டவாறே திரளாக வந்து ஜின்னா டவர் மீது தேசியக் கொடியை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்று சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர்.