மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மற்றும் மேல் பஜார் பகுதியில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏராளமான குரங்குகள் முற்றுகையிட்டு கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்கள், பொரிகடலை, பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தின்பண்டங்களை எடுத்து செல்வதுடன் பொருட்களை தரையில் தள்ளி அட்டகாசம் செய்து வருகின்றன. அவ்வாறு சாலையில் செல்லும்போது பல சமயங்களில் வாகனங்களில் அடிபட்டும், மின்சாரம் தாக்கியும் குரங்குகள் இறப்பது வாடிக்கையாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று மஞ்சூர் பஜார் பகுதியில் குரங்கு ஒன்றின் குட்டி இறந்துபோனது. ஆனால் குட்டி இறந்தது தெரியாமல் குட்டியின் உடலை அந்த குரங்கு போகும் இடமெல்லாம் தூக்கி கொண்டு சென்றது. இது காண்போரை பரிதாபத்தில் ஆழ்த்தியது.கடை வீதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து தொலைதூர வனப்பகுதியில் விட வேண்டும் என வனத்துறையினருக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.