×

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி: மயிலாப்பூர், திருவான்மியூர் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மயிலாப்பூர், திருவான்மியூர், அடையாறு சுற்றுவட்டார பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் உள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட  கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். பகுதி-9க்கு 81449 30909, பகுதி-13க்கு 81449 30913, பகுதி-14க்கு 81449 30914, பகுதி-15க்கு 81449 30915 என்ற எண்களில் பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mylapore ,Thiruvanmiyur , Maintenance work at seawater treatment plant: Drinking water supply to Mylapore, Thiruvanmiyur will be suspended tomorrow
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...