பெங்களூரு: கைதாகி சிறையில் உள்ள பிரபல ரவுடியிடம் பணம் பெற்றுக்கொண்டு சொகுசு வசதிகளை செய்து கொடுத்திருப்பதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக பலமுறை குற்றச்சாட்டு எழுந்தன. சசிகலா சிறையில் இருந்த போது இந்த சம்பவம் பேசுபொருளாக கவனம் ஈர்த்தது. இதில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
சிறையில் கைதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சொகுசு வசதிகளை சிறைத்துறை அதிகாரிகளே ஏற்படுத்தி தந்திருப்பது வீடியோ ஆதாரத்துடன் தற்போது வெளியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடி நாகராஜ் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாகராஜிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவருடைய அறையில் டி.வி, செல்போன், மெத்தையுடன் கூடிய படுக்கை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்க்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறப்பு உணவுகளை அவர்கள் அறைக்குள்ளேயே சமைத்துக்கொள்ள தேவையான பொருட்களையும் சிறை அதிகாரிகளே சப்ளை செய்து வந்துள்ளனர்.