சென்னை: கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஊராட்சித் தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் தனது ஊராட்சியில் கிராம சபையைக் கூட்டலாம். அதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று ஊராட்சிகள் சட்டம் தெளிவாக சொல்கிறது. ஆக, கிராமசபை கூட்டுவதென்பது ஊராட்சித் தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு விவகாரம்.
இதையே சமீபத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பல ஊராட்சித் தலைவர்கள், சட்டப்படி 7 நாட்களுக்கு முன்னரே உள்ளூர் மக்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு ஜனவரி 26ம் தேதி கிராமசபையை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசு கிராம சபை நடத்த விதித்திருக்கும் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.