×

புரோ கபடி லீக் தொடர்; 3 அணியில் 15 வீரர்களுக்கு கொரோனா தொற்று: போட்டி அட்டவணையில் மாற்றம்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 75வது லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 41-22 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் புனேரி பால்டன்-தபாங் டெல்லி அணிகள் மோதின.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனேரி பால்டன் 42-25 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மோஹித் கோயாட் 10 புள்ளி எடுத்தார்.

10வது போட்டியில் 3வது வெற்றி பெற்ற புனேரி 32 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. டெல்லி 13வது போட்டியில் 4வது தோல்வியை சந்தித்தது. இதனிடையே தொடரில் பங்கேற்றுள்ள சில அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முதல் பாதி தொடர் வெற்றிகரமாக முடிந்த  நிலையில் குஜராத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய 3 அணிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று காரணமாக 2 அணிகள் போட்டிக்கு தேவைப்படும் 12 வீரர்களை களம் இறக்குவது கடினமாகி உள்ளது. இதனால் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் 2 போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 28ம் தேதி வரை ஒரு போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது.  இன்று இரவு 7.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் மோதுகின்றன.

Tags : Pro Kapati League Series , Pro Kabaddi League Series; Corona infection in 15 players in 3 teams: change in the match schedule
× RELATED சில்லி பாயின்ட்…