மதுரை: மதுரை கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் கடந்த 2007 முதல் கடன் வசூல் தீர்ப்பாயம் செயல்படுகிறது. இதன் கீழ் 10 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. கடந்த 2008 முதல் பொறுப்பு நீதிபதியைக் கொண்டே இயங்குகிறது.
இதுவரை முழுநேர நீதிபதி நியமிக்கப்படவில்லை. இதனால் வழக்குகள் அதிகளவில் தேங்கியுள்ளன. வழக்குகளில் தீர்வு காண்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீதிபதி மற்றும் அனைத்து காலியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில், நாடு முழுவதும் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கேபினட் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. விரைவில் நியமன பணிகள் முடியும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நியமன நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளவும், பணிகள் பாதிப்பை தடுக்க கூடுதல் பொறுப்புடன் கூடிய பணிகளை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.