×

கொரோனா பரவல் காரணமாக நாளை கிராம சபை கூட்டங்கள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் காரணமாக நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சி திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல், ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழிவகுத்தல் உள்ளிட்டவை கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  கிராம மக்களின் கையில் இருக்கும் அதிகாரமாக கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஜனவரி மாதத்திற்கு பிறகு குறிப்பாக ஓராண்டிற்கு மேலாகவும் தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2021 அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, அன்றைய தினம் 28 மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களுடன் உரையாடினார்.

இந்நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவலை முன்னிட்டு நாளை தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 26ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது. அன்றைய தினம் கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government , Village council meetings to be canceled tomorrow due to corona spread: Tamil Nadu government announcement
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...