கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உ ள்ளது. இதனால் மின்கம்பிகள் தாழ்வாக சாலையில் தொங்குவதால் கரும்பு லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் சாலையை கடந்து செல்கிறது. மேலும் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஒரு மாதத்திற்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் தியாகதுருகம் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த கம்பத்தில் சிமெண்ட் கலவை போட்டுள்ளனர்.
இதனால் மின்கம்பிகள் தொடர்ந்து தாழ்வாகவே இருந்து வருகிறது. இதனால் கரும்பு டிராக்டர் செல்லும்போது, மின்விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த நிலையில் உள்ள இரண்டு மின்கம்பத்தையும் அகற்றிவிட்டு கரும்பு லோடு ஏற்றி செல்லும் வாகனத்தில் மின்கம்பிகள் உரசாத வண்ணம் உயரமான மின்கம்பங்கள் அமைத்திட மாவட்ட மின்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.