திண்டுக்கல் : திண்டுக்கல்-நத்தம் சாலை அகலப்படுத்தும் பணியின்போது வீடுகள், தெருக்கள் முன்பு குவிக்கப்பட்ட பெரிய கற்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்-நத்தம் சாலை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சாலை காரைக்குடி வரை நீண்டு செல்கிறது. இந்நிலையில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது ஆங்காங்கு வெடிவைத்து இடையூறாக இருந்த பாறை கற்கள் அகற்றப்பட்டன.
இந்த கற்களை நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கு விட்டு விட்டு சென்று விட்டனர். இந்தக் கற்கள் தெருக்கள் முன்பு, வீடுகள் முன்பு குவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமலும். வியாபாரிகள் கடைகளை திறந்து நடத்த முடியாமலும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் நடக்க முடியாமலும் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக திண்டுக்கல் ஐ.டி.ஐ. எதிர்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மாத கணக்கில் வீடு, கடைகளை மறித்து பெரிய கற்கள் குவிந்துள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையளர்கள் கார்களை எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தேசிய நெடுஞ்சாலை துறை கற்களை அகற்றி உதவிட வேண்டும். இதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.