ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையிலான முத்துக்குமார், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஓசூர் மாநகர் மட்டுமின்றி ஓசூர் ஒன்றியம், கெலமங்கலம் ஒன்றியம் மற்றும் தளி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்பட்டு வந்த ஜெனரல் ஸ்டோர்ஸ், பெட்டிக்கடைகள் மற்றும் பீடா ஸ்டால்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்கள் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 10 கடைகளில் இருந்து சுமார் 15 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்களுக்கு தலா ₹5 ஆயிரம் வீதம் மொத்தம் ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், 10 கடைக்காரர்களுக்கும் நோட்டீஸ் வழங்கினர். தொடர்ச்சியாக தவறிழைப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். வழக்கில் பாதுகாப்பற்ற மற்றும் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யும்பட்சத்தில் ₹2 லட்சம் அபராதம் மற்றும் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கவும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் எச்சரிக்கை விடுத்தார்.
மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் லாரி, கார்களில் கடத்தியது தொடர்பாக மொத்தம் 12 பேர் மீது மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஓசூர், கிருஷ்ணகிரி, தளி, பர்கூர் ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.