வாலாஜா : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் உள்ள பெரிய ஏரி பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏரி நிரம்பி கோடி போனது. ஏரியில் மீன்கள் உற்பத்தியும் அதிகரித்து காணப்பட்டது.மேலும், இந்த ஏரியில் மீன்களை வளர்ப்பதற்கும், அதை பராமரித்து ஏலம்விட்டு விற்பதற்கும், அதே பகுதியை சேர்ந்த 3 நபர்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த ஆண்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்குஞ்சுகளை ஏரியில் விட்டு வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.சி.மோட்டூர் ஏரியில் இருந்த 50க்கும் மேற்பட்ட மீன்கள் திடீரென செத்து கரை ஒதுங்கி இருந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீன்களை வளர்க்க ஏலம் எடுத்த நபர்கள் வந்து ஏரியை பார்வையிட்டனர்.அப்போது, சில மீன்கள் மட்டுமே செத்து கிடந்த நிலையில், பெரும்பாலான மீன்கள் நன்றாக இருப்பதாகவும், ஏரியில் கழிவுப்பொருட்கள் கொட்டுவதால் ஏற்படும் ஒவ்வாமையால் அந்த மீன்கள் இறந்துபோய் இருக்கலாம் என தெரிவித்தனர்.
எனவே, நேற்றும் ஏரியில் செத்து கிடக்கும் மீன்களும் கழிவுப்பொருட்கள் கலந்து ஒவ்வாமையால் இறந்தனவா அல்லது வேறு ஏதாவது காரணமா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.