×

பிஏ.2 எனும் புதிய துணை மாறுபாட்டுடன் சமூகப் பரவலாக மாறியது ஒமிக்ரான்: பெருநகரங்களில் தொற்று அதிகரிப்பு

புதுடெல்லி: ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவல் கட்டத்தை எட்டியிருப்பதாகவும், பிஏ.2 எனும் புதிய துணை மாறுபாட்டுடன் பெருநகரங்களில் வேகமாக பரவி வருவதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மரபணு வரிசைப்படுத்தும் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 3வது அலை ஏற்பட்டுள்ளது. இதன் தினசரி தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமின்றி, உள்நாட்டிலேயே பரவும் வகையில், ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூகப் பரவல் கட்டத்தை எட்டி இருப்பதாக ஐஎன்எஸ்ஏசிஓஜி அமைப்பு கூறி உள்ளது.

ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, கொரோனா வைரஸ்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10ம் தேதி தயாரிக்கப்பட்ட இதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது சமூகப் பரவல் கட்டத்தை எட்டி உள்ளது. பல பெருநகரங்களில் இது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதிய தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒமிக்ரானின் மரபணு ‘எஸ் ஜீன்’ என அழைக்கப்படுகிறது. தற்போது, இந்த மரபணுவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய வகை மரபணுக்கள் உருவாகி, பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு நாடுகளில் ஒமிக்ரானின் புதிய வகையான பிஏ.1 கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிஏ.2 எனும் புதிய துணை மாறுபாடு இந்தியாவில் பெரும்பாலானோருக்கு தொற்றி உள்ளது. அதே நேரம், பிரான்சில் கண்டறியப்பட்ட ஐஎச்யு (பி.1.640.2) எனும் புதிய வகை வைரஸ் இந்தியாவில் யாருக்கும் பரவவில்லை. இது தற்போது கவலைதரும் வைரசாக இல்லை. இனி வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் இருந்து மட்டுமின்றி, உள்நாட்டவர்களிடம் இருந்தே இந்த பிஏ.2 வரை ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அது கூறி உள்ளது. பிஏ.2 துணை மாறுபாடு இந்தியா, சுவீடன், டென்மார்க் உள்ளிட்ட 40 நாடுகளில் பரவி உள்ளது. தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவலில் இந்த வகை மாறுபாடுதான் உலகளவில் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

* அடுத்த மாதம் 6ம் தேதி 3ம் அலை உச்சமடையும்
சென்னை ஐஐடி கணிதத் துறை ஆய்வாளர்கள் கூறுகையில், ‘கொரோனா ஒருவரிடமிருந்து பிறருக்கு பரவும் வீரியத்தை கணக்கிடும், ‘ஆர் மதிப்பு’ மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது. இம்மாதம் 1-6ம் தேதி 4 புள்ளிகளாக இருந்த ஆர் மதிப்பு தற்போது (ஜன.14-21) 1.57 ஆக குறைந்துள்ளது. மும்பை (0.67), டெல்லி (0.98), சென்னை (1.2), கொல்கத்தா (0.56) போன்ற பெருநகரங்களில் ஆர் மதிப்பு குறைந்துள்ளது. அடுத்த 2 வாரத்தில் இது மீண்டும் அதிகரிக்கலாம். இன்னும் 14 நாட்களில், அதாவது பிப்.6ம் தேதி 3ம் அலை உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது’’ என்றனர்.

* காது கூட காலியாகிடும் ஒமிக்ரான் புது அறிகுறி
தென் ஆப்ரிக்காவில் முதலில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட போது, அது மிகவும் சாது என்று கூறப்பட்டது. பின்னர், இது தாக்கினால் சளி, இருமல் மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது. கண், இருதயம், மூளை உட்பட உடலின் பல பாகங்களை இது தாக்கக் கூடும் என்று சமீப காலமாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது காதின் உட்பகுதியையும் தாக்கும் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது மதிப்பிற்குரிய இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைய விழைகிறேன். மேலும், நான் இந்திய குடியரசு துணைத் தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்தேன்,’ என்று கூறியுள்ளார்.

* வெங்கையாவுக்கு 2 முறை தொற்று
துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி, அவர் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வீட்டுத் தனிமையில் இருப்பார் என துணை ஜனாதிபதி தலைமை செயலகம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வெங்கையா நாயுடு டெல்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Omigron became socially pervasive with a new subtype of PA2: increase in infection in metropolitan areas
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்