திருத்தணி: திருத்தணி கீழ் பஜாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இது அந்த பகுதியில் பிரபலமான கோயிலாகும். நேற்று முன்தினம் கோயிலில் பூஜையை முடித்துவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று கோயில் கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோயில் முன் ஏராளமானோர் திரண்டனர்.
தகவலறிந்த கோயில் பூசாரி வந்து பார்த்தபோது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 சவரன் தாலி செயின் மற்றும் தங்க கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், கோயில் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தையும் அவர்கள் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையே, கோயிலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், அந்த பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்றதும் தெரியவந்தது. புகாரின்படி, திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.