சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே 28ம்தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த ஜூன் 28ம் தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. மருத்துவ சிகிச்சையை தொடர்வதற்காக பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு கடந்த மே முதல் 8 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், 9வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளளின் மருத்துவ சிகிச்சை கருதி அவரது பரோல் விடுமுறையை ஜனவரி 24 முதல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.