சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜவகர், கடந்த சில நாட்களுக்கு முன், உதவி ஆணையராக மாற்றலாகி சென்று விட்டார். அதனால், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன் கூடுதலாக சட்டம் ஒழுங்கு பிரிவை கவனித்து வந்தார். அப்போதுதான், சட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் நடந்து, பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுஇந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பல்வேறு என்கவுன்டர்களில் ஈடுபட்டவர்.உதவி ஆய்வாளராக இருந்தபோது 2005ம் ஆண்டு ரெட்டேரி பகுதியில் ரமேஷ் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்டார். 2006ம் ஆண்டு செம்பியம் காவல் நிலையத்தில் இவர் பணிபுரிந்தபோது கொல்கத்தாவில் 3 மாதம் தங்கியிருந்து வங்கதேச நாட்டை சேர்ந்த 11 கிரில் கொள்ளையர்களை சென்னை போலீசார் கைது செய்தனர். அந்த சிறப்பு குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.
மேலும் 2007ம் ஆண்டு எம்கேபி நகர் பகுதியில் ரவுடியாக வலம் வந்த வெள்ளை ரவி என்கவுன்டர் வழக்கு, 2012ம் ஆண்டு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட போது 5 நபர்களை வேளச்சேரியில் வைத்து என்கவுன்டர் செய்த வழக்கு, 2019ம் ஆண்டு மாதவரம் பகுதியில் வல்லரசு என்ற ரவுடியை என்கவுன்டர் செய்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர். மேலும், 2016ம் ஆண்டு எஸ்ஆர்எம் கல்லூரியில் ₹84 கோடி மோசடியில் ஈடுபட்ட மதன்குமாரை கைது செய்த வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தொடர்புடையவர்.
சட்டக்கல்லூரி மாணவன் கைது விவகாரத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த 6 பேர் பல்வேறு காரணங்களுக்காக வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். அதற்கு காரணம் தொடர்ந்து அவர்கள் அந்த காவல் நிலைய எல்லைக்குள் பல்வேறு முறைகேடான விஷயங்களில் ஈடுபட்டனர் என பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது சட்டக் கல்லூரி மாணவர் விவகாரத்தில் கொடுங்கையூர் காவல் நிலையம் பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக ஜார்ஜ் மில்லர் நியமிககப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.