காரைக்குடி: மாநில ரோல்பால் போட்டியில் சாதனை படைத்த மானகிரி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டம் மார்தாண்டத்தில் தமிழ்நாடு ரோல்பால் அசோசிஷேயன் சார்பில் மாநில அளவில் 8வது சப்-ஜூனியர் ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. 20 மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் சிவகங்கை மாவட்டம் சார்பில் காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தீபேஷ்ரவி, தருண், ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பள்ளிகுழும தலைவர் குமரேசன் பேசுகையில், ‘செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் கல்விக்கு தரும் முக்கியத்துவம் விளையாட்டுக்கும் அளிக்கப்படும். இதன்காரணமாக தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மாணவர்கள் சாதனை புரிவது தொடர்கிறது. ஒவ்வொரு மாணவர்களும் படிப்புடன் ஏதாவது ஒரு துறையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும். எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து அதனை நோக்கி பயணம் செய்தால் வெற்றி நிச்சயம்’ என்றார். நிகழ்ச்சியில் துணைதலைவர் அருண்குமார், பள்ளி முதல்வர் உஷாகுமாரி, துணைமுதல்வர் பிரேமசித்ரா, தொழிலதிபர் ரவி, தங்கவேல், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.