மூணாறு : மூணாறு இரவிகுளம் தேசியப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினரின் மார்க்கெட் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில், 10 வகையான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளது. இங்கு இடமலைக்குடி, லக்கம்குடி, ராஜமலை, மறையூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் சாகுபடி செய்யும் இயற்கை காய்கறி, செறு தேன், காட்டு நெல்லிக்காய், தேன், யூக்காலி மற்றும் புல் தைலம் உள்ளிட்ட 10 வகையான உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இந்த மார்க்கெட் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பழங்குடியினரின் மேம்பாட்டு திட்டமாகவும், மூணாறு வனவிலங்கு பிரிவு இந்த மார்க்கெட்டை அமைத்துள்ளது. மேலும், பூங்காவிற்க்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு பொருட்களை வாங்கி வருகின்றனர். இரவிகுளம் தேசியப் பூங்காவில் பழங்குடியினரின் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மூணாறு வனவிலங்கு பிரிவு அதிகாரி ஜோப் நரியம்பரம்பில் தெரிவித்துள்ளார்.