காஞ்சிபுரம்: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பைக் கண்டித்து காஞ்சிபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தொகுதி செயலாளர் கமலநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய விடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, ஜனவரி 26ம் தேதி, குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார அணி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வஉசி, பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பை, மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து கண்டன கோஷமிட்டனர். இதில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வி.சீனிவாசன், மூர்த்தி, சுந்தரமூர்த்தி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.