சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஒன்றிய அரசு அனுமதிக்க மறுத்த ஊர்தி், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்பும், ஒன்றிய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது.
குடியரசு நாள் விழா ஊர்வலத்தில், தமிழக மக்களையும் மக்களாட்சி பண்புகளையும் இழிவு செய்யும், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கினைக்கண்டித்து, வரும் 26ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை மதிமுக வரவேற்கிறது. அனைத்துக் கட்சி அலுவலகங்கள் முன்பும், வீடுகளின் முன்பும் தனி நபர் இடைவெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்பிடுமாறு தமிழ் மக்களை மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.