×

ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கில் அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்

திருவில்லிபுத்தூர்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில், முதல் குற்றவாளியான விஜயநல்லதம்பி திருவில்லிபுத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன், தனது சகோதரி மகன் ஆனந்திற்கு விருதுநகர் ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக, அதிமுக ஒன்றியச் செயலாளரும், சாத்தூர் ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவருமான விஜயநல்லதம்பி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த நவ. 15ல் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து, விஜயநல்லதம்பியிடம் விசாரித்தனர். விசாரணையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஒன்றியச் செயலாளர் விஜயநல்லதம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகியோருக்கு மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஆவின், சமூக நலத்துறை உள்பட பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பெற்றது உட்பட ரூ.3 கோடியை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேரிடம் கொடுத்தாக விஜயநல்லதம்பி புகார் அளித்தார். இதன்பேரில், ராஜேந்திரபாலாஜி கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார்.

இந்த மோசடி வழக்கின் முதல் குற்றவாளியான விஜயநல்லதம்பியை, தனிப்படை போலீசார் கடந்த 16ம் தேதி கோவில்பட்டி அருகில் புளியங்குளம் பகுதியில் சுற்றி வளைத்தனர். இதையறிந்த அவர், போலீசாரிடம் சரணடைந்தார். அதன்பின் போலீசார் விசாரணைக்கு பின், அவரை காவல்நிலைய ஜாமீனில் வெளியே விட்டனர். இந்நிலையில், விஜய் நல்லதம்பி நேற்று நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பதற்காக நீதிபதி பரம்வீர் முன்பு ஆஜரானார்.
இந்த ரகசிய வாக்குமூலத்தின்போது நீதிமன்றத்தில் கதவுகள் மூடப்பட்டன. பகல் ஒரு மணிக்கு துவங்கிய வாக்குமூலம் மாலை 4 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் விஜய் நல்லதம்பி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,Vijaya Nallathambi ,Rajendrapalaji , AIADMK leader Vijaya Nallathambi made a 3 hour secret confession in the fraud case against Rajendrapalaji
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...