ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று தோல்வியைத் தழுவிய இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா (35 வயது), இந்த ஆண்டுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார். இது குறித்து கூறுகையில், ‘தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன். ஆனால், எனது உடல்தகுதி அதற்கு அனுமதிக்குமா என தெரியவில்லை. காயங்கள் குணமாக நீண்ட காலம் ஆகிறது.
எனது மகனுக்கும் தற்போது 3 வயதாகிறது. போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்லும்போது அவனையும் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் அவனது உடல்நலம் பாதிக்கும் அபாயமும் உள்ளது. முழங்கால் மூட்டு வலியும் இன்று அதிகமாக இருந்தது. ஆனாலும், இதை தோல்விக்கான காரணமாக சொல்ல விரும்பவில்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டே இந்த சீசனுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’ என்றார்.