திருமலை: சமுதாயத்தில் பக்தியை வளர்க்க அனைவரும் செயல்பட வேண்டும் என திருப்பதி கோயில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்த மலைவாழ் மக்களிடம் கூடுதல் செயல் அலுவலர் தர்மா கூறினார். இந்து மதப்பிரசாரம் செய்யும் விதமாக கிழக்கு கோதாவரி மாவட்டம் அட்டதிகளா, ரம்பசோடவரம் போன்ற பின்தங்கிய மலைவாழ் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களை சொர்க்கவாசல் வழியாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று அழைத்து வரப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.
பின்னர், திருமலையில் உள்ள மாதவ நிலையத்தில் அவர்களிடம் கூடுதல் செயல் அதிகாரி தர்மா பேசியதாவது: கடந்த ஆண்டு ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் போது மலைவாழ் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள 1000 பக்தர்களை அழைத்து வரப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது. தற்போதும் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் மீனவ சமூகங்களைச் சேர்ந்த பக்தர்கள் வெங்கடேஸ்வர சுவாமியை சொர்க்கவாசல் வழியாக வாழ்க்கையில் முதன்முறையாகக் கண்டு தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்து தர்மத்திற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக மதமாற்றத்தை தடுக்கும் விதமாக சமரசதா சேவா அறக்கட்டளையுடன் இணைந்து 502 கோயில்களை மாநிலம் முழுவதும் தேவஸ்தானம் கட்டியுள்ளது.
அந்த கோயில்களில் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தில் பக்தியை வளர்க்க அனைவரும் செயல்பட வேண்டும். மாநிலத்தின் 13 மாவட்டங்களில் உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் மீனவ பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்து வைக்கப்பட்டு வருகிறது. இன்று(நேற்று) கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏஜன்சி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், சமரஸ்தா சேவா அறக்கட்டளையின் உதவியுடன், பேருந்துகள் மூலம் திருமலைக்கு இலவசமாகச் அழைத்து வரப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.