பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழக்கிழமை அன்று அதிகாலை கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வியாசர்பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த அப்துல்ரஹீம் (21) என்பவர் முக கவசம் அணியாமல் சென்றதால் அவரை போலீசார் அழைத்து முக கவசம் அணியும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில், அப்துல் ரஹீம் அங்கிருந்த போலீஸ்காரர் உத்திரகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி, அப்துல்ரஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அப்துல் ரஹீமை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில், சென்னை மாநகர கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன் போலீஸ்காரர் உத்திரகுமார், ஏட்டு பூமிநாதன் ஆகியோரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்தனர். இந்தநிலையில், இந்திய மாணவர் சங்கம் சார்பில், கொடுங்கையூர் இபி சந்திப்பு அருகே வடசென்னை மாவட்ட தலைவர் காவியா, செயலாளர் நித்தீஷ் ஆகியோர் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.