கொல்கத்தா : வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். மேற்கு வங்கத்தின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆண்டு பிறந்தநாளையொட்டி மேற்கு வங்கத்தின் சார்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்து உள்ளது. இதனால், இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், ‘நேதாஜி மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கு அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மேற்கு வங்க அரசின் அலங்கார ஊர்திக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, ஒன்றிய அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்து குடியரசு தினவிழாவில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கேரள அரசின் ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்திக்கும் ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இவர், ‘ஒன்றே குலம்; ஒருவனே தெய்வம்’ என்ற தத்துவத்தை வலியுறுத்திவர். இவரின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கேரளாவை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.