×

105வது பிறந்தநாளை முன்னிட்டு அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:  முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17ம் தேதி) காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

1936ம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்தாலும், 1950ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி மற்றும் மந்திரிகுமாரி திரைப்படங்களின் வாயிலாகத் திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றதோடு, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார்.

அவர் நடித்த பல படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணாவால் ‘இதயக்கனி‘ என்றும், முத்தமிழறிஞர் கலைஞரால் வழங்கப்பட்ட ‘புரட்சி நடிகர்’ என்கிற பட்டமே பின்னாளில் புரட்சித் தலைவர் என்று நிலை பெற்றது.
அவரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, அவரின் மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். தான் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிவரையில் முத்தமிழறிஞர் கலைஞருடனான உயர்ந்த, உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர். அவரை பெருமைப்படுத்துகின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் 17.1.1990 அன்று சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார்.

அந்த விழாவிலே, “தனிப்பட்ட முறையிலே எனக்கும் எனதருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எனக்கும் அவருக்குமான நட்புணர்வை, என்னையும் அவரையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே தெரிந்திருக்க முடியும்’’என்று நட்புணர்வோடு குறிப்பிட்டார்.  
மேலும், சென்னை கிண்டியில் அவரால் உருவாக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் என்று பெயர் சூட்டியதோடு, அவரின் திருவுருவச்சிலையினையும் 1998ம் ஆண்டு திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார்.

முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் நினைவினைப் போற்றுகின்ற வகையில் அவரது 105வது பிறந்த நாளானது (ஜனவரி17) தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : MGR , Dr MGR, 105 Birthday, TN Government
× RELATED புழல், எம்ஜிஆர் நகர் பகுதியில்...