×

முதுமலை, கோழிகமுத்தியில் யானை பொங்கல் விழா கோலாகலம்

ஆனைமலை: முதுமலை, கோழிகமுத்தியில் யானை பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு  யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா நேற்று எளிமையாக கொண்டாடப்பட்டது. யானைகள் மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டு அலங்காரம் செய்து மாலைகள் அணிவிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. யானைகளுக்கு பொங்கல், வெல்லம்,  கரும்பு தேங்காய் உள்ளிட்ட சிறப்பு உணவுகளுடன் வழக்கமான உணவுகளும்  வழங்கப்பட்டன.

நீலகிரி கலெக்டர் அம்ரித் யானைகளுக்கு கரும்பு வழங்கி  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகளும்  கலந்து கொண்டனர். இன்று முழு ஊரடங்கு காரணமாக நேற்று குறைவான அளவிலேயே வெளி மாநில சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளே ஓரளவு முதுமலைக்கு வந்திருந்தனர். கோழிகமுத்தி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப்பில், ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று, யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள்  முகாமில்  யானை பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. ஆனைமலை புலிகள்   காப்பகத்திற்கு உட்பட்ட டாப் ஸ்லிப் வனப்பகுதி அருகில் அமைந்துள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில், வனத்துறை சார்பில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுடன் பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து, யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கினர்.

முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஆனைமலை புலிகள்   காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் கணேசன், உலாந்தி வனச்சரகர் காசிலிங்கம் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகள் யானைகளுக்கு உணவளிக்க தடை செய்யப்பட்டது.


Tags : Elephant Pongal Festival Kolagalam ,Mupalai, Koligamuthi , Elephant Pongal festival in Mudumalai, Kozhikode
× RELATED முதுமலை, கோழிகமுத்தியில் யானை பொங்கல் விழா கோலாகலம்